முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டில் கொள்ளை: திருப்பூரில் பரபரப்பு
திருப்பூரில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் சபாநாயகரும், அவினாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் தனபால். வெளியூரை சேர்ந்த தனபால், திருப்பூர் ராக்கியாபாளையத்தில், வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். இதனால், இந்த வீட்டில் எப்போதாவதுதான் அவரும் குடும்பத்தாரும் இருப்பது வழக்கம்.
இந்த நிலையில், நேற்றிரவு தனபாலின் வீட்டிற்குள் 4 பேர் கொண்ட கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். வீட்டின் கதவு பூட்டை நெம்பி உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், பூஜை அறையில் இருந்த இரண்டு வெள்ளி விளக்குகளை திருடிச் சென்றனர். வீட்டில் துணிகள் மட்டுமே இருந்ததால், வேறு பொருட்கள் கிடைக்காமல், 2 வெள்ளி விளக்குகளை எடுத்துக் கொண்டு திருடர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், டிஎஸ்பி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். அவினாசி தொகுதி எம்.எல்.ஏ. வீட்டில் திருடு போன சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





