குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும்..!
குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டியில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரொனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி இருப்பதால் அதற்கு ஏற்ப தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். விதிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றினால் அரசு தொடர்ந்து தளர்வுகளை அறிவிக்கும் என்றார் அவர்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார் . அப்போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருமொழிக் கொள்கையை அரசின் நிலைப்பாடு என்று கூறினார். குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர். இந்தியாவில் என்ன நிலைமையோ அதற்கு ஏற்ப தமிழகமும் செயல்படும் என்று தெரிவித்தார்.
இ பாஸ் முறையை எளிமையாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னதாக தசை சிதைவு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பால் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல சக்கர நாற்காலிகளை அவர் வழங்கினார்.







