பெண் குரலில் ஆபாசமாக பேசி ஆண்களை ஏமாற்றிய நெல்லை இளைஞர்! ஒரு வீடியோ காலுக்கு 1000ரூபாய்!
பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஆண்கள் குறித்த செய்திகளை அதிகளவில் கேட்டிருப்போம். ஆனால் ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பெண் குரல் குறித்த செய்தி சற்று புதிராகவே உள்ளது. ஒரு ஆடியோவில் பேசியவர் சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தவர்.
இப்படி இவர் கொடுத்த புகார் ஒன்றல்ல, இரண்டல்ல ஓராயிரம். தவறாகவும், ஆபாசமாகவும் தன்னிடம் பேசுகிறார்கள் என இமெயில் மூலம் தான் புகார்களை அளிப்பார். புகாரில் தனது கைபேசி எண்ணுக்கு பதில் யார் மீது புகார் கொடுக்கிறாரோ அவர்களுடைய கைபேசி எண்ணை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். புகார் தொடர்பான விபரங்களை காட்டி சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பறித்துள்ளார் .
இப்படி மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு வந்த புகார் ஒன்றில் குறிப்பிடப்பட்ட எண்ணை காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். சென்னை மதுரவாயலை சேர்ந்த உதயராஜ் என்ற அந்த நபர் தன் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறுகிறார். ஆனால் தன் மீது பிரியா என்ற பெண் ஒருவர் ஆபாச புகார் அளித்து இருப்பதாகவும், அதனை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இணையதளம் ஒன்றின் மூலம் பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆபாசமாக உரையாட முதலில் 100 ரூபாய் கட்டணம் செலுத்த கூறியதாகவும் உதயராஜ் தெரிவித்துள்ளார். வீடியோ காலில் பேச ஆயிரம் ரூபாய் என்ற பிரியா கூற அதற்கு உதயராஜ் மறுத்துள்ளார். இதனை அடுத்து தான் உதயராஜ் நம்பரை பயன்படுத்தி அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உதய ராஜூடன் தொலைபேசியில் உரையாடி அவரின் விபரங்களை விசாரிக்கும்போது அந்த நபர் நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மயிலாப்பூர் காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. பிரியா என்ற பெயரில் பெண் குரலில் பேசியது ராஜ்குமார் என்ற வாலிபர் என்பது தெரியவந்தது.
பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களிடம் இதுபோன்ற புதுமையான முறையில் மோசடி செய்து பணம் பறித்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் பேசுதல், ஆபாச படங்களை பகிர்தல், மிரட்டுதல் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்கி இருப்பதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
பெண் போல் பேசி பணம் பறிப்பதை சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது இரு பெண்கள் மூலம் கற்றுக் கொண்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் மோசடி செய்து பணத்தை பறித்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




