உள்ளாட்சி தேர்தல் : அனைத்து கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, சென்னையில் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் தேமுதிக சார்பில் அழகாபுரம். மோகன்ராஜ், பாஜக சார்பில் குமரகுரு, காங்கிரஸ் சார்பில் தாமோதரன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாரகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக அரசு கடந்த வாரம் அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்கு ஆளும் அதிமுக தவிர்த்து அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டதாக தெரிகிறது.மேலும் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது, தேர்தல் தேதி, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்த தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.





