--- --:--:-- --

ரயிலில் நிற்க கூட இடமில்லை..ஊர் திரும்பும் மக்கள் அவதி..!

2

சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முன்பதிவில்லா ரயிலான அந்தியோதயா ரயிலில் பயணிகள் முண்டியத்து ஏறினர்.

 

ரயிலில் உட்கார இடம் இல்லாத போதும், பலர் நின்று கொண்டே பயணம் செய்தனர். இதன் காரணமாக, முன்பதிவில்லாத ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதே போல, மதுரை ரயில் நிலையத்திலும் ஏராளமானோர் குவிந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டினர்.

 

ரயில் நிலையத்தப் போலவே மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று மட்டும் 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

 

இதற்கிடையே, பண்டிகை முடிந்து கார்களில் சென்னைக்கு திரும்புவோரால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நெரிசலைத் தவிர்க்க அவ்வபோது கட்டணமில்லாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

 

இதேபோல, சென்னை புறநகரில் உள்ள வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று இன்னும் அதிகமானோர் சென்னை திரும்புவர் என என்பதால், நெரிசலும் இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon