திராவிட இயக்க கதைகளால் மாநில பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டம் நிரம்பியுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி
நீலகிரி மாவட்டம் உதகையில், தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது, மாநிலத்தில் உயர் கல்விக்கான கூட்டுச் சூழல் அமைப்பை உருவாக்க இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கிறது என்றார். பல்கலைக்கழகங்களில் நிலவும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்படுவதாக கவலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போரிட்டதாக கூறிய ஆளுநர் ரவி, மாநில பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட இயக்க வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதற்கு மாறாக திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அய்யா வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், வள்ளலாரின் சன்மார்க்க இயக்கம், தலித் தலைவர் சுவாமி சகஜானந்தனாவின் நந்தனார் இயக்கம் ஆகியவை பாடத்திட்டத்தில் தவறவிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் விமர்சித்தார்.
ஜெனரேட்டிவ் ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங், அட்வான்ஸ்டு ரோபோட்டிக்ஸ், அல்ட்ரா நானோ தொழில்நுட்பம் மற்றும் சிந்தெட்டிக் பயாலஜி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஆளுநர், இந்த தொழில்நுட்பத் திறன்களை இளைஞர்கள் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




