--- --:--:-- --

கோவிட் மருத்துவ மையம் தொடங்க நிதி உதவி செய்த  நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா..!

13

திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவிட் மருத்துவ மையம் தொடங்க நிதி உதவி செய்த  நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா..!

 

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் கோவை மற்றும் திருப்பூரில் அதிகமாக இருந்தது. திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம்,15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தது மட்டுமில்லாமல் ஆக்சிஜன் கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்தனர்.

 

இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசுடன் இணைந்து அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்ஷயா டிரஸ்ட் தலைவரும், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான பரணி பெட்ரோல் பங்க் உரிமையாளர் நடராஜன் தலைமையில், பள்ளி வளர்ச்சிக் குழு செயலாளர் சிட்டி வெங்கடாச்சலம், அக்ஷயா டிரஸ்ட் செயலாளர் சுப்ரீம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் அக்ஷ்யா டிரஸ்ட் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் 3 வேளையும் உணவுகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் 36 ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 200 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவ மையம் 2021 கடந்த மே மாதம் 28 ந்தேதி தொடங்கப்பட்டு 5 ந் தேதியுடன் நிறைவடைந்தது.

கடந்த 36 நாட்கள் செயல்பட்டு வந்த இந்த முகாமில் 1253 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 703 பேர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு 370 நோயாளிகள் ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை பெற்றனர். மேலும் 550 நோயாளிகள் வீட்டில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்றுள்ளனர்.

 

65 நோயாளிகள் உயர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

 

இதைத்தொடர்ந்து அக்ஷயா டிரஸ்ட், அறிவு திருக்கோயில், திருப்பூர் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் கோவிட் மருத்துவ மையம் 2021 தொடங்குவதற்கு தாராளமாக நிதி உதவி வழங்கி இந்த மையம் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களை பாராட்டும் வகையில் கொடையாளர் விருது வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

விழாவானது மனவளக்கலை தவமைய பேராசிரியை தீபாவின் குரு வணக்கம், தவத்துடன் தொடங்கியது. அக்ஷயா டிரஸ்ட் தலைவர் பரணி பெட்ரோல் பங்க் நடராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ஆர். கிருஷ்ணன், ம.தி.மு.கவின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ், சி.பி.எம் மாவட்ட செயலாளர் காமராஜ், அக்ஷயா டிரஸ்ட் செயலாளர் சுப்ரீம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ. ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அறிவு திருக்கோவில் அறங்காவலர் ஆடிட்டர் ஆர்.எம்.செந்தில்குமார் அக்ஷயா டிரஸ்ட் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்.

திருப்பூர் இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர்கள் செந்தில்குமார், குணசேகரன், முருகநாதன், முத்துசாமி, நசீர், எம்லிசுசை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், திருப்பூர் மாநகர போலீஸ் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஞானபாரதி விருது பெற்ற வெ.அனந்தகிருஷ்ணன் விழா பேருரை ஆற்றினார். தொடர்ந்து ரூ. 500 முதல் ரூ.5 லட்சம் வரை நன்கொடை வழங்கியவர்களுக்கும், மருத்துவ முகாமில் பொருளுதவி செய்தவர்கள், உடல் உழைப்பை தந்தவர்கள், மூன்று வேளையும் இலவசமாக சத்தான உணவுகள் வழங்கியவர் என அனைவரையும் பாராட்டி விருது வழங்கப்பட்டது. முடிவில் அறிவு திருக்கோயில் மக்கள் தொடர்பு அதிகாரி கே.பி முருகன் நன்றி கூறினார். விழாவினை தவமைய பேராசிரியர் முரளிகுமார் தொகுத்து வழங்கினார்.

படம் : அக்ஷயா டிரஸ்ட், அறிவு திருக்கோயில், திருப்பூர் இந்திய மருத்துவர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோவிட் மருத்துவ மையத்தில் சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர் மற்றும் விழா சிறப்பு விருந்தினர்களை படத்தில் காணலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon