நிவர் புயலையடுத்து மேலும் ஒரு புயல் வலுவடைகிறதா..?
வங்க கடல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 30ஆம் தேதி புயலாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் நிவர் புயல் தெற்கு ஆந்திர பகுதிக்கு சென்று வலுவிழந்து விட்டது என்று கூறினார்.
இதன் விளைவாக வட மேற்கு மாவட்டங்களான தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து இருப்பதாக தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இதுவரை 29 சென்டிமீட்டர் பெய்துள்ளது என கூறியவர் வழக்கமாக 34 சென்டிமீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும் என்று கூறினார்.
நவம்பர் மாத நிலவரப்படி 5 சென்டிமீட்டர் குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்திருக்கிறது என்றும் தெரிவித்தார். தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்றும் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.






