மாதத்துக்கு 6 நாள் என 5 மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம்! ஆளுநர் ஒப்புதல்!
அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாதத்திற்கு ஆறு நாட்கள் என்கிற கணக்கில் ஐந்து மாதங்களுக்கு பிடிக்க வழி செய்யும் கேரள அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கொரொனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மாதத்தில் ஆறு நாட்கள் ஊதியத்தை பிடித்து வைத்துக்கொள்ள கேரள அரசு ஆணை வெளியிட்டது.
இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தொடுத்த வழக்கில் அரசு ஆணையை செயல்படுத்த இரண்டு மாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஊதியப் பிடித்தம் செய்வதற்கு அவசர சட்டம் கொண்டு வந்த மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என காங்கிரஸ், பாஜக ஆகியவை கேட்டுக்கொண்டனர்.இந்நிலையில் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் ஒப்புதல் அளித்துள்ளார். அவசர சட்டம் கொண்டு வந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.






