வீட்டுக்கு முன்பு பேனர் வைத்த ராமதாஸ்!
அரசியலில் இருந்து துறவறம் மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தே அன்புமணியை நீக்கியிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இருவருக்கும் இடையேயான மோதல் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருமே கட்சியை சொந்தம் கொண்டாடினர்.
இறுதியில் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் என அன்புமணியை குறிப்பிட்டு அவரது அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியது. தேர்தலுக்கு பிறகு இருவரும் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸின் 88ஆவது பிறந்த நாளையொட்டி தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார் அன்புமணி. அன்றைய தினம் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ் தான் அரசியல் துறவறம் பூணுவதாக அறிவித்தார். மேலும், “இனி அரசியல் பேசமாட்டேன். அரசியலில் நான் தலையிடமாட்டேன்.
அதனை அன்புமணி பார்த்துக் கொள்வார். அவர் துணைவியார் பார்த்துக் கொள்வார். என்னை பார்க்க வருபவர்கள் என்னிடம் அரசியல் பேச வேண்டாம்.” என்று அறிவித்தார் ராமதாஸ். மேலும், “என்னை தொந்தரவு செய்யாதீர்கள். வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள். அரசியல் பேச வேண்டாம். எனக்கு தலை சுற்றல் வியாதி உள்ளது. உங்களை பார்க்க ஆவலோடு ஓடி வந்துள்ளேன். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு மாறாது.” என்றும் பேசியிருந்தார். அன்றிலிருந்து இன்று வரை அவர் எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் பகுதியில் அமைந்துள்ள ராமதாஸ் இல்லம் முன்பு அரசியல் பேச வேண்டாம் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் மருத்துவர் ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொண்டு உள்ளதால் அவரிடம் அரசியல் பேச வேண்டாம் என எழுதப்பட்டுள்ளது. மேலும் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மருத்துவர் ராமதாசை சந்திக்கலாம் என்றும் ஆனால் அரசியல் பேச வேண்டாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





