கொரானா அச்சுறுத்தல்: தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவிட கோரிக்கை!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் 50 விழுக்காடு மட்டுமே அலுவலகத்திற்கு வருகை தந்தால் போதும் என்று அறிவித்தது போல் தமிழக அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.இந்த சூழ்நிலையில் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் மோடியும், 22ந்தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.மத்திய அரசும் ஊழியர்கள் 50% பேர் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அறிவுறுத்தி உள்ளது.

 

தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கைளை எடுத்து வருகிறது,31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான திரையரங்குகள், பெரியளவிளான ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பெரிய மால் கள், மூடவும், அரசு பொது நிகழ்ச்சிகள் , அரசியல் கட்சி மற்றும் விழாக்களுக்கு தடை விதித்துள்ளது , தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூட உத்தரவு , தமிழ்நாடு தேர்வாரியத்தின் மூலம் நடக்கும் தேர்வுகள் ரத்து ,மாநில முழுவமும் கொரோனா தடுப்பு மையங்களை அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் அலுவலக பணிகளை வீட்டிலிருந்து கவனிக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்கள் 50 விழுக்காடு மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அளித்துள்ளது போல், அதனை பின்பற்றி தமிழக அரசும் ஊழியர்கள், ஆசிரியர்களையும் வீட்டிலிருந்தபடியே பணிகளை மேற்கொள்ள உத்தரவிட தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக சா.அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Leave a Reply