மக்களின் செலவு செய்யும் சக்தி குறைந்தது !

இந்தியாவில் மக்களின் வாங்கும் சக்தி 1973 ஆம் ஆண்டுக்கு பின் தற்போது குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களின் செலவு செய்யும் சக்தி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்கள் பொருட்களை வாங்கும் திறனின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி 2017 – 2018 ஆம் நிதியாண்டில் கிராமங்களில் மக்களின் செலவழிக்கும் சக்தி 8.8% வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் செலவு செய்யும் சக்தி தொடர்பாக ஜூலை 2017 ஆம் ஆண்டு தொடங்கி ஜூன் 2018 வரை நடத்தப்பட்ட ஆய்வுக்கான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

 

ஒரு மாதத்தில் சராசரியாக செலவிடப்படும் தொகை 2011 – 2012 ஆம் ஆண்டில் ஆயிரத்து 501 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 3.7 சதவீதம் குறைந்து 2017 – 2018 ஆம் ஆண்டில் ஆயிரத்து 446 ரூபாயாக உள்ளது. நாட்டிலுள்ள பணவீக்கம் இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக காய்கறிகளின் விலை 26.1 சதவீதமும், பருப்பு வகைகள் விலை 11.7 சதவீதமும் உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் செலவு செய்யும் சக்தி 1973 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் குறைந்துள்ளதாகவும் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply