காஷ்மீரின் பல பகுதிகளில் இன்றும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, விமான சேவைகளும் முடங்கியுள்ளன.
காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியதால், பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. காஷ்மீரை, நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, பனியால் சூழப்பட்டு, மூடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஸ்ரீநகரை இணைக்கும் குரேஷ், மாச்சில், தாங்தார் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு உள்ளது. முக்கிய சாலைகள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் நிற்கின்றன. சாலைகளை மூடியபடி கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்ல இருந்த 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் இன்றும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. பனிப்பொழிவுக்கு இதுவரை, 4 பேர் இறந்திருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.