என்னை சர்வர்ன்னு நெனச்சியா? போனில் பேசியவரை கரூர் கலெக்டர் மிரட்டியதாக சர்ச்சை
போனில் தொடர்பு கொண்டு ஆழ்துளை கிணறு பற்றி புகார் சொன்னவரிடம், என்னை என்ன சர்வன்னு நினைச்சியா என்று கரூர் கலெக்டர் மிரட்டியதாக, சமூக வலைதளங்களில் ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், கலெக்டர் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அண்மையில், கரூர் மாவட்டம் மாவட்டம் மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் உயிரிழந்தான். இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து, அதிகாரிகள் விவரம் சேகரித்து மூடி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறு இருப்பது பற்றி தகவல் சொல்லி நபரை, போனில் கரூர் கலெக்டர் அன்பழகன் திட்டியது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ஆழ்துளை கிணறு தொடர்பாக தகவல் அளித்தும் அதிகாரிகள் முறையாக பணி செய்வதில்லை என்று புகார் கூறிய இளைஞரை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் போனில், “கலெக்டர்னா சரவணபவன் சர்வர்ன்னு நெனச்சியா ? வைடா போனை ராஸ்கல்…” என்று எச்சரிப்பது போன்று இடம் பெற்றுள்ளது.
இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரிடமும் அன்பு காட்டி, பாராட்டு பெற்ற கலெக்டரா இப்படி பேசுகிறார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த தகவலை ஆட்சியர் அன்பழகன் மறுத்துள்ளார். அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இச்சம்பவம், அதிகாரிகள் அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




