கடல்நீரை தூய்மைப்படுத்த ஆராய்ச்சி செய்ய வேண்டும்: வெங்கையா நாயுடு
நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல்நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு விழா சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்றது.
இதில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெள்ளி விழா சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் முன்னறிவிப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.
அதை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சமாளிக்க அதிக அளவில் கடல் நீரை தூய்மைப்படுத்தவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




