தமிழகத்தின் 6 இடங்களில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை!

கோவை, நாகை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவையில் ஜி.எம் நகர், லாரிபேட்டை ஆகிய இரண்டு இடங்களில் அதிகாலையிலேயே என்‌ஐ‌ஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

 

ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட நபர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் சமீர், சவுரு தீன் ஆகிய இருவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 2 மடிக்கணினிகள், 8 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் ஒரு மெமரி கார்ட், 14 ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம் சன்னமங்கலம் சேவாபாரதி பகுதியை சேர்ந்த முகமது அஜ்மலிடம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். 3 என்‌ஐ‌ஏ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடத்திய இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் அப்துல்லா என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வீட்டில் அப்துல்லா இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். முடிவில் அப்துல்லாவின் கைப்பேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

 

இதுபோன்று திருச்சி மாவட்டம் இனாங்குளத்தூர் பகுதியில் சாகுல்ஹமீது என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த தடாஅப்துல் ரஹிமின் அமைப்பின் தொடர்புடைய முகம்மது சிராஜுதீன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுவிக்குமாறு தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

இதன் பிறகு சிராஜுதீனை சென்னையில் உள்ள என்‌ஐ‌ஏ அலுவலகத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் என்‌ஐ‌ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply