தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் வரவேற்ற தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தமைக்கும் நன்றி.
திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 26 ஆயிரம் கோடிதான். ஆனால்,அதிமுக ஆட்சியில் 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.53 ஆயிரம் கோடிக்கு தொழில் துவங்கப்பட்டுள்ளது.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக செய்துவரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள்.குறுகிய எண்ணம் படைத்தவர் ஸ்டாலின் என சாடினார்.மேலும்,கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை குறுகிய காலத்தில் செயல்படுத்தி வருகிறோம்.திட்டமிட்டு தவறான செய்திகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார்.
திமுக ஆட்சி காலத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.எங்களை விமர்சிக்க ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகிறது.காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை மேலும் மூன்று தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் நீர் மேலாண்மை மேற்கொள்ளவும், உபரி நீரை சேமிக்கவும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசு செயல்பாட்டை அறியாமல் உள்ளார் ஸ்டாலின் எனவும் பேசினார்.
மேலும்,இந்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்தால் ஆதரிப்போம்.மோட்டார் வாகன சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் தடுக்கப்படும்.மத்திய அரசின் சட்டத்தை பரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும்.டெல்டா பாசனத்திற்கு தூர்வாரும் பணிக்கு 66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டை பற்றியே கவலைப்படாத கட்சி திமுக தான்.உலக நாடுகளை பார்வையிட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
நேரில் சென்று தெளிவுபடுத்தினால் தான் முதலீட்டாளார்கள் ஆர்வம் காட்டுவார்கள்.வெளிநாடுகளில் உள்ள விதிமுறைகளை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் சரியான வளர்ச்சி இருக்கும்.பொருளாதார நெருக்கடி தமிழகத்தில் இல்லை.தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. என் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கால்நடை வளர்ப்பு வெளிநாட்டில் மிகவும் வித்யாசமாக உள்ளது.இங்கு ஒரு மாவட்டத்தில் சேகரிக்கும் பால் வெளிநாட்டில் ஒரே இடத்தில் சேகரிக்கப்படுகிறது. அதே போன்ற நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்தப்படும் எனவும் பேசினார்.
மேலும்,கேரள முதல்வரை சந்திக்கும் போது சிறுவாணி உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் .வெளிநாடுகளில் 10 ,12,16 என வழிதடங்கள் இருக்கின்றன.தமிழகத்தில் 8 வழித்தடங்கள் என்றால் போராட்டம் நடத்துகின்றனர். வெளிநாடுகளில் உள்ள சாலைகள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் நல்ல சூழ்நிலை இருக்கின்றது. நிறைய முதலீடுகள் வந்து இருக்கின்றது. நெருக்கடி இருந்தால் எப்படி வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வருக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது,கோவை மாநகர மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.