அமெரிக்காவில் பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் தமிழகத்தில் 2780 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில் இங்கிலாந்து சென்று அவர் அடுத்து அமெரிக்கா சென்றுள்ளார்.
நியூயார்க்கில் இருநூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் என்று முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் உறுதியளித்தார். இதனால் 16 நிறுவனங்கள் தமிழகத்தில் 2780 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிறுவனங்களின் முதலீட்டால் தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைதவிர ஹெல்தியா பெட்ரோகெமிக்கல் என்ற அமெரிக்க நிறுவனம் தமிழகத்தில் 50,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க கொள்கை அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.