தனது மகளை சந்தேகப்பட்டு கொன்றதால் மருமகனை கொல்ல கூலிப்படை ஏவிய தந்தை

தேனி மாவட்டம் போடியில் மருமகனை கொலை செய்வதற்காக அதிகாலையில் கூலிப்படையினர் 5 பேருடன் வேனில் சுற்றிக் கொண்டிருந்த மாமனார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் இரவு ரோந்து கண்காணிப்பு மற்றும் துரித நடவடிக்கையினால் நடைபெற இருந்த ஒரு கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரின் வயது 24. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சமயநல்லூர் கல்லூரியில் படிக்கும்போது தோடநேரியைச் சேர்ந்த வீரைய்யா மகள் தமிழ்ச்செல்வியை காதலித்து வந்துள்ளார்.

 

இருவீட்டிலும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்து போடிமெட்டு சாலையில் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயபால் தமிழ்ச்செல்வியை அடித்து தள்ளியுள்ளார். கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். அப்போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

 

போடி போலீஸார் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் தந்தை வீரய்யாவிற்கு தனது மருமகன் ஜெயபால் மீது கடும்கோபம் ஏற்பட்டது. காதலித்து தனது மகளை எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததுடன், கர்ப்பிணியாக இருந்த அவரை கொலையும் செய்துவிட்டார் என்று வெறியில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மருமகனை கொலை செய்ய முடிவு செய்தார்.

 

இதற்காக மதுரை தனிச்சியம், திருவேடகம் பகுதியைச் சேர்ந்த கணேசன் வயது 24, ஜெகன் வயது 30, தேவேந்தர் வயது 24, குமரவேல் வயது 27. நாகமணி வயது 29 ஆகியோருடன் நேற்று ஆம்னி காரில் போடிக்கு வந்துள்ளார். கேரளாவிற்குச் சென்றிருந்த ஜெயபால் நள்ளிரவிற்குப்பிறகு போடி வருவதாக அறிந்த இந்த கும்பல் பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் இன்று அதிகாலை சுற்றி வந்துள்ளனர்.

 

அப்போது இருசக்கரவாகனத்தில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வெற்றிவேந்தன், ஸ்ரீதர் ஆகியோர் வ.உசி.சிலை அருகே அதிகாலையில் 2.30 மணிக்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தை அங்கேயே தடுத்து நிறுத்தி போடி நகர காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அவரது தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மருமகனை கொலை செய்யும் நோக்கோடு பட்டாக்கத்தி, சூரிக்கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களுடன் வந்திருப்பது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து ஆறுபேரும் கைது செய்யப்பட்டனர்.


Leave a Reply