தவறான உறவுக்கு இடையூறாக இருந்த மகளை தாயே தனது கள்ள காதலுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் நெடுமங்காட்டை சேர்ந்த மஞ்சுஷா என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 15 வயது மகள் மீராவுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி இரவு முதல் மஞ்சுசாவையும், மீராவையும் காணவில்லை என்று உறவினர்கள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சனிக்கிழமை அன்று கன்னியாகுமரியிலிருந்து நெல்லை செல்லும் வழியில் மஞ்சுசாவை பிடித்தனர். இளைஞர் ஒருவர் மஞ்சுசாவுடன் இருக்கவே அவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். மகள் மீரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், பயத்தில் அவரது உடலை கிணற்றில் வீசிவிட்டு ஓடி வந்து விட்டதாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் அவர் வாக்குமூலம் நம்பும் படியாக இல்லாததால் துருவி துருவி விசாரணை மேற்கொண்ட போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காரணத்தால் 8 ஆம் தேதி இரவு அவருடன் சேர்ந்து மீராவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசிவிட்டதாக மஞ்சுசா வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை மறைத்தல் பிரிவின் கீழ் மஞ்சுசா மீது பதியப்பட்ட வழக்கு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது.