மத்தியில் காங். ஆட்சி மாநிலத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி! முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பேச்சு

மத்தியில் வெற்றி பெற்று காங்கிரஸ் அரசு அமையும்; அடுத்த நாளே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்கும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசினார்.

 

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் புறநகர் மாவட்ட தலைவர் விஎம்சி மனோகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேசினர்.

 

இக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி 3 நிமிடத்தில் அமைந்துவிட்டது. காரணம், இரு கட்சிக்கும் வரலாறு தெரியும். இக்கூட்டணி, 6 முறை நின்று, வென்றது.மா நிலங்கள் இல்லாமல் மத்திய அரசை நடத்த முடியாது. நமக்கு நெருக்கமான மத்திய அரசு இல்லாமல் மாநில அரசை நடத்த முடியாது. இந்த முறையும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

 

பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் முதல் வரிசையில் இருப்பது தமிழகம். பாஜக அரசு.ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே உடை பழக்க வழக்கம் இருக்க வேண்டும் என சவால் விடுகிறது; அதை முறியடிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. மக்கள் தொகையில், 20 சதவீத மக்கள் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளனர். அவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் தருவோம் என தேர்தல் அறிக்கையில் கூறினோம்.

 

 

இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று, பாஜக கூறுகிறது. இத்திட்டம் மட்டும் அல்ல; 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், தகவல் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வந்தபோதும், இதையே தான் பாஜக கூறியது. ஆனால், காங்கிரஸ் நிறைவேற்றி காட்டியது. மத்தியில் காங்கிரஸ் கட்சி அமைந்து, மாநிலத்தில் கையிலாகாத அரசு இருந்தால் எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும்?

 

எனவே, மத்திய அரசு திட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் மத்தியில் மாற்று அரசு அமைந்தால், தமிழகத்திலும் மாற்று அரசு அமையும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த மறுநாளே தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர்வார்.

 

அதிமுக இப்போது, எம்ஜிஆர். கண்ட கழகமோ ஜெ வளர்த்த கட்சியோ அல்ல. ஓபிஎஸ் ஈபிஎஸ் ஜோடி நடத்தும் நகைச்சுவை நாடகம். மோடிக்காக ஆடுகின்ற ஜோடி. இவர்களுக்கு கொள்கையும் இல்லை;இவர்கள், பாஜகவின் கைப்பாவை என்று சிதம்பரம் பேசினார்.

 

முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, அதிமுக கூட்டணி என்பது கொள்ளை ரீதியான கூட்டணி. அரசியல் ரீதியாக இந்தியாவை மேம்படுத்துகின்ற கூட்டணிதான் மதசார்பற்ற கூட்டணி. அனைவரும் மோடியை வீட்டிற்கு அனுப்ப தயாராக உள்ளனர். பாஜகவோ, மோடி அரசோ மக்களுக்கு எந்த சிறந்த திட்டத்தையும் செய்யவில்லை. மோடியின் கையில் இந்தியா உள்ளதோ இல்லையோ, மோடியின் கையில் எடப்பாடி பத்திரமாக உள்ளார் ” என்று பேசினார்.

 

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மெளலானா, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எம்ஏ, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, சிபிஐ செயலாளர் சுந்தரம், சிபிஎம் செயலாளர் இராமமூர்த்தி, கொமதேக செயலாளர் பிரீமியர் செல்வம், மதிமுக செயலாளர, குகன்மில் செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலா மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply