ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான பள்ளம் இருப்பதால், குழந்தைகளை அனுப்பி வைக்க பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளார்கள். இந்த அங்கன்வாடி மையத்தின் வாசலில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த மாதம், குடிநீர் வடிகால் வாரியத்தினர், இந்த உடைப்பை சரி செய்வதற்காக ஜேசிபி வாகனம் மூலம் பெரிய பள்ளத்தை தோண்டி, உடைப்பை சரி செய்தனர். ஆனால், ஆபத்தான பள்ளத்தை மூடாமல், வழக்கம் போல் அப்படியே சென்றுவிட்டனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் பள்ளத்தை மூடாமல் அலட்சியமாக உள்ளார்கள். இதனால் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பி விட்டு, அச்சத்தில் பெற்றோர்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர். விபத்து ஏற்பட்டால் தான் விழித்துக் கொள்வது அதிகாரிகளின் வழக்கமாக உள்ளது.
எனவே, அவ்வாறு எதுவும் ஏற்படாமல் இருக்க, பள்ளத்தை உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, குழந்தைகள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.