கமல்ஹாசன் கூட்டம் நடத்திய பள்ளிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 24-ந் தேதி கோவையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர் களை அறிமு கம் செய்து வைத்தார்.

முன்னதாக சிங்கநல்லூரில் உள்ள தனியாா் பள்ளியில் டாக்டா்களுடன் கலந்துரையாடினார். தகவல் அறிந்து சிங்காநல்லூர் தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, உரிய அனுமதி இல்லாமல் இதுபோன்ற கூட்டம் நடத்தக் கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்? என விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ராஜாமணி, சிங்கா நல்லூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் பிரபாகரனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

அதில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விளக்கத்தில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்


Leave a Reply