தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை..!
தமிழகத்தில் திருவாரூர், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கொரடாச்சேரி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
தொடர் கனமழை காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இந் நிலையில் திருவாரூரிலிருந்து செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கியது.
பெரம்பலூர் நகர பகுதியான பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் செஞ்சேரி பாளையம், திருவாரூர், அம்மாபாளையம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.






