இந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிடும் WHO..!
உலக சுகாதார அமைப்பின் வரைபடங்களில் இந்திய எல்லைகள் தவறாக குறிப்பிடப் படுவதை எதிர்த்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரொனா தொற்று பரவலை பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிடும் வரைபடங்களில் இந்திய எல்லைகள் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரைபடங்களில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இந்தியாவுடன் இல்லாமல் தனியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் கடந்த டிசம்பர் 30 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றது.
இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் வரைபடத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த எட்டாம் தேதி வரை படத்தை பற்றிய அதிருப்தியை இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆய்விற்கான இந்திய பிரதிநிதி இந்திரா மணி பாண்டே உலக சுகாதார நிறுவன இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் இணைய தள பக்கங்களில் இந்திய எல்லைகள் தவறாக சித்தரிக்க பட்டதாக கூறியுள்ள அவர் அதற்கு கடும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தலையிட்டு தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடங்களை இணையதள பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சரியான வரைபடங்களை உலக சுகாதார அமைப்பு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






