அம்மா இருந்திருந்தால் என்ன சொல்வார்கள்? – முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
திருச்சுழி தொகுதியின் எம்எல்ஏ தங்கம் தென்னரசு. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் குடும்ப பின்னணியைக் கொண்ட முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் தங்கப் பாண்டியனின் மகன் தங்கம் தென்னரசு. இவரது குடும்பம் பல தசாப்தங்களாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
தந்தையைப் பின்பற்றி அரசியலில் ஈடுபட்ட தங்கம் தென்னரசு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான 2006ஆம் ஆண்டு அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த திமுக அரசின் நிதித் துறை, தொழில் துறை பொறுப்புகளை கவனித்து வந்தார்.
தமிழ்மொழி, வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சித் துறைகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பேச்சாளராகவும், சட்டமன்றத்தில் நிர்வாகத் திறமையுடன் செயல்படக்கூடிய உறுப்பினராகவும் அறியப்படும் தங்கம் தென்னரசு இன்று வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு கவனம் பெற்றுள்ளது.
தனது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அம்மா இல்லாத இடத்தை யாராலும் நிரப்ப முடியாது… வாழ்க்கைப் பயணத்தில் காலம் நிறையக் கற்றுக் கொடுத்துள்ளது, ஆனால் அம்மாவின்றி வாழ இன்னும் கற்றுக்கொள்ள முடியவில்லை. சிறுவயதில், ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அம்மாவிடம் ஓடிச் செல்வேன். இன்று பிரச்சினைகள் வந்தால், “அம்மா இருந்திருந்தால் என்ன சொல்வார்கள்?” என்று ஒரு நிமிடமாவது நினைத்துக்கொள்வேன்.
இன்று அவரது பிறந்தநாள். அவரது கைகளைப் பிடித்து, பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால், அவர் கொடுத்த அன்பும், கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும், விட்டுச் சென்ற நினைவுகளும் இன்னும் என்னுடன் இருக்கின்றன; அவையே என்னை வழிநடத்துகின்றன. என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், என் நினைவுகளின் ஒவ்வொரு பக்கத்திலும், என்றென்றும் இருப்பவர் என் அம்மா. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா…” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




