இன்று தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா!
அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை தின விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, நாளை சிஐஎஸ்எஃப் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.இதற்காக அமித் ஷா இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலையத்துக்கு இரவு 9.05 மணிக்கு வருகை தர உள்ளார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்திற்குச் செல்ல உள்ளார். இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.நாளை காலை 8 மணிக்கு சிஐஎஸ்எஃப் உதய தின விழாவில் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று உரையாற்ற உள்ளார். அதன்பின்னர் அமித் ஷா காலை 10.30 மணிக்கு அங்கிருந்து பெங்களூரு செல்ல உள்ளார்.





