கர்ப்பிணிக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்! குவியும் பாராட்டு!
பெரம்பலூரில் நிறைமாத கர்ப்பிணிக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனம் பரிசோதனைக்காக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்று உள்ளார்.
பின்னர் பரிசோதனை முடிந்தவுடன் கடும் வெயிலில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரடங்கின் கண்காணிப்பு பணியில் இருந்த நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் கர்ப்பிணி நடந்து வருவதைக் கண்டு அவரிடம் விசாரித்தார்.
பிறகு அவரை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் காவல் ஆய்வாளரின் மனித நேய செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.







