முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்! தமிழக அரசு கண்டிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பரவலை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்க, மாவட்ட வாரியாக தலைமை செயலர் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில், டிஜிபி, கூடுதல் தலைமை செயலர், வருவாய் துறை ஆணையர், முதன்மை தேர்தல் அலுவலர், முதன்மை செயலாளர்(பொது, சுகாதாரம்) தமிழக மருத்துவ பணிகள் கழகம், மேலாண்மை இயக்குநர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஷ் கமிஷனர் பொது சுகாதார துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், “கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் 1.2% உயர்ந்துள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். பிரசாரங்கள் மற்றும் கலாச்சார கூட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சென்னை மற்றும் கோவையில் கொரோனாவின் தாக்கம் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
கொரோனா தாக்கத்துடன் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொது இடங்களில் பொது மக்கள் மாஸ்க் அணிவதையும், நிலையான நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.





