டிச.7-ல் கல்லூரிகள் திறப்பு…!14-ந் தேதி முதல் மெரினாவில் அனுமதி…! கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!!
கொரோனா ஊரடங்கை டிசம்பர் 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து, பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 7-ந் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு, டிசம்பர் 14-ந் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் முழு ஊரடங்கு போடப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையால், அடுத்து வந்த ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இதனால் தற்போது பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சகஜ நிலை திரும்பி உள்ளது. ஆனாலும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. ரயில், விமான போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து போன்றவை மட்டும் இன்னும் முழுமையாக இயங்கவில்லை.
தமிழகத்தில், கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், 6 ருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 28-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில் இன்று வெளியான அறிவிப்பில் டிசம்பர் 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரிகள் திறப்பு, மெரினாவில் அனுமதி உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:தமிழத்தில் டிசம்பர் 31- தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கும். டிசம்பர் 7-ந் தேதி முதல் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி.
டிசம்பர் 14-ந் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி .நீச்சல் குளங்கள் பயிற்சிக்கு மட்டும் செயல்பட அனுமதிசமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி .கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.
நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி, இ-பாஸ் முறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஆந்திரா,கேரளா , புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.
மத்திய அரசு அறிவித்திருந்த விமான போக்குவரத்துக்கு அனுமதி , வெளிநாடு விமான போக்குவரத்திற்கு அரசு அறிவித்த நெறிமுறைகள் உடன் மட்டும் செயல்படும் என்பது போன்ற அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.






