மாற்று இடம் தராமல் எங்களை காலி செய்வதா..? திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் தராமல் காலி செய்வதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாலன் தலைமையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும்.
நல வாரிய மனுக்களை பரிசீலித்து பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். வட்டி இல்லாத வங்கிக்கடன் வழங்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான்கு மண்டலங்களில் கட்டப்படும்1500 கடைகளில் தரைத்தளத்தை சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். சங்கப் பொருளாளர் கே.ராமர் உள்பட வியாபாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.






