தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஒருசிலஇடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான மழையும் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை சோலையாறு பகுதிகளில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






