திருடிய வாகனத்தில் உலா வந்த திருடர்கள்! ஒரு எஸ்எம்எஸ் ஆல் மாட்டிக்கொண்ட திருடர்கள்
கொரொனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கிய இரு சக்கர வாகனத்தால் களவுபோன 8 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருடர்கள் 2 பேர் சிக்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் கடந்த 18ஆம் தேதி மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 29 வயதான ரஞ்சித், மற்றும் ஹமீது சுல்தான் ஆகியோரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து அனுப்பி விட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காவல் நிலையத்தில் இருந்து செல்போனில் குறுந் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி ரஞ்சித் சுல்தானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எண்ணை வைத்து அதற்கான செல்போன் எண்ணுக்கு கடந்த 18ம் தேதி மாலை போலீசார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். அந்த குறுஞ்செய்தி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த தியாகு என்பவருக்கு கிடைத்துள்ளது. அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு நடந்ததை கூறியுள்ளார். அதில் பிப்ரவரி மாதம் அவருடைய வாகனம் திருடப்பட்டுள்ளது.

அந்த வாகனம் தான் ஹமீது சுல்தானிடம் சிக்கியதும் தெரியவந்தது. அதேபோல் கடந்த 21ஆம் தேதி அவர் மீண்டும் ஒரு வாகனத்தில் வந்த போது சிக்கினார். அதே நாளன்று அந்த வாகனத்திற்கான செல்போன் எண்ணுக்கு போலீசார் அனுப்பிய குறுஞ்செய்தி கரூரில் உள்ள ஒருவருக்கு சென்றுள்ளது. அவர் போலீசாரை தொடர்பு கொண்டு தன்னுடைய வாகனமும் களவுபோனதை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரஞ்சித் கான் மற்றும் ஹமீது சுல்தானை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் ஹமீத் ரியாஸ் என்பவன் வாகனங்களை திருடி தன்னிடம் ஒப்படைத்ததாகவும் தாங்கள் அவற்றை விற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உட்பட 8 விலையுயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டில் தொடர்புடைய ஹமீது, ரியாஸ் உட்பட 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.







