ஆண் குழந்தையை பாட்டியே விற்ற அதிர்ச்சி சம்பவம்!
பிறந்து நான்கு மாதங்களே ஆன பேரனை மூன்று லட்சம் ரூபாய்க்கு பாட்டியே விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ராஜா மற்றும் மீனா இருவருக்கும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் மீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு மீனாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அந்த குழந்தையை பராமரிக்குமாறு தனது தாயிடம் ஒப்படைத்து உள்ளார். ஆனால் மீனாவின் தாய் அந்தக் குழந்தையை மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.
குழந்தையை எடுக்க சென்ற போதுதான் மற்றொருவருக்கு விற்கப்பட்ட சம்பவம் மீனாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து தனது பெற்றோர் மீது மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் தனது குழந்தையை மீட்டு தரக்கோரி சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனா தம்பதியர் புகார் மனு அளித்தனர்.





