புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்தது!
திருவண்ணாமலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. 60 வயதான முதியவர் கொலை செய்யப்பட்டது எப்படி? நிலத்தை சுற்றிலும் முள் வேலி போட்டு உள்ளார் முதியவர் கிருஷ்ணமூர்த்தி. மற்றொரு விவசாயி சிவகுமார் புல்வெளியை தீயிட்டுக் கொளுத்தி முதியவரை கொலையும் செய்துள்ளார்.
அரசு புறம்போக்கு நிலம் கொலைக்களம் ஆனது எப்படி? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரை அடுத்த பலாமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதான கிருஷ்ணமூர்த்தி. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயதான சிவகுமார் இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இருவரும் அருகருகே உள்ளன. இவர்களுக்கு இடையே 50 சென்ட் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
அதை இருவரும் பாதியாக பிரித்து ஆக்கிரமித்து தங்களின் நிலத்துடன் இணைத்து விவசாயம் செய்து உள்ளனர். இதில் சிவக்குமாரை விட அதிகமான புறம்போக்கு நிலத்தை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் தனது நிலத்தை சுற்றி கிருஷ்ணமூர்த்தி முள்வேலி போட்டுள்ளார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சிவகுமார் இரவு நேரத்தில் அந்த முள்வேலியை தீயிட்டு கொளுத்தி உள்ளார். அதனால் 29-ஆம் தேதி மாலை மீண்டும் சிவக்குமார் கிருஷ்ணமூர்த்தி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி மார்பில் பலமாக தாக்கியுள்ளார் .இதில் கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
தகவலறிந்த ஜமுனாமரத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பாப்பாத்தி அம்மாள் கொடுத்த புகாரின் பேரில் விவசாயி சிவகுமாரை கைது செய்தனர். அரசு புறம்போக்கு நிலத்தை அதிகளவில் ஆக்கிரமிப்பது என்பதில் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்த சம்பவம் ஜமுனாமரத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







