திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி கிடையாது – மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கடந்த ஒரு மாதமாக களைகட்டி வந்த தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
இதையொட்டி, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கண்ணகி நகரில் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து நடைபயணம் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக தொண்டர்கள், பொதுமக்கள், கபடி வீராங்கனைகள் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதேபோன்று, வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மெளலானாவை ஆதரித்து முதலமைச்சர் நடைபயணம் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியனை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். அப்போது, ஆட்டோவில் பயணித்தும், கரும்பு ஜூஸ் போட்டுக் கொடுத்தும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக இன்று காலை முதல்வர் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். அதில், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர், ஆட்சியில் உள்ள ஒருசில குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை தண்டிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தான் பற்ற வைத்த நெருப்பு தான் அந்த மசோதாவை சாம்பலாக்கியிருப்பதாகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் ஓனர் பாஜக என்று விமர்சித்துள்ள முதலமைச்சர், திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.






