மாதவரத்தில் பயங்கர தீ விபத்து: 4 தனியார் குடோன்கள் தீக்கிரை, கரும்புகையால் மக்கள் அவதி
சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் நிறுவன குடோன் ஒன்றில் திடீரெனப் பிடித்த தீ, அடுத்தடுத்து இருந்த 4-க்கும் மேற்பட்ட குடோன்களுக்கு வேகமாகப் பரவி அவற்றை முழுமையாகத் தீக்கிரையாக்கியது.
குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவெனப் பற்றி எரிந்து கட்டுக்கடங்காமல் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் வானுயரக் கரும்புகை சூழ்ந்துள்ளதால், கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள தீயணைப்புத்துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






