ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை!
கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரொனா தடுப்பு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து இருப்பதாக குறிப்பிட்டார்.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். விரைவில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
3 லட்சத்து 44 ஆயிரம் கோடி அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு 68 கோடியே 88 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.







