யாருக்கு சீட் தரலாம்? மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று ஆலோசனை
விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்திய நிலையில், அதிமுகவில் யாருக்கு சீட் தரலாம் என்பது பற்றி, மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒருமாத அவகாசமே உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தரப்பில் 8000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்த நிலையில், அவர்களுக்கு நேற்று சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் ஒரே கட்டமாக நேர்காணல் நடைபெற்றது.
விருப்ப மனு அளித்தவர்களுடன் கூட்டமாக நேர்காணல் முடிந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விவாதிக்கின்றனர். இதன் முடிவில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தி, அதிமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் தினம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.





