மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது..!
மருத்துவப் படிப்பில் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசால் ஒப்படைக்கப் படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசு ஊழியர் துறை அதிகாரிகள் அடங்கிய குழு முடிவு எடுக்கும்.
மேலும், அடுத்த கல்வியாண்டில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது.
தமிழகத்தில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் சட்டம் உள்ளதால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காலதாமதம் தேவையில்லாத ஒன்று என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவர உள்ளது.






