தவெகவின் ஐந்து எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய பொறுப்பு – முதலமைச்சர் விஜய்
தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில் கட்சியின் அமைப்பு ரீதியாக ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து தவெக தலைவரும், முதலமைச்சரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக உத்திரமேரூர் எம்.எல்.ஏ. முனிரத்தினம், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்ட செயலாளராக நாங்குநேரி எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. மரியை ஜான், திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக திருநெல்வேலி எம்.எல்.ஏ. ஆர்.எஸ். முருகன், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்ட செயலாளராக போளூர் எம்.எல்.ஏ. அபிஷேக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.





