செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த தாய்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பணமதிப்பிழப்பு குறித்து அறியாமலேயே பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை மகளின் திருமணத்திற்காக மாற்றுத்திறனாளி தாய் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. பட்டியமெடு கிராமத்தை சேர்ந்த ராஜதுரை – உஷா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
உஷாவும் அவரது மகளும் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். பல ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்து தனது மகளின் திருமணத்திற்காக பணம் சேர்த்த உஷா தனது வீட்டிலேயே குழி தோண்டி புதைத்து வைத்து உள்ளார்.

அண்மையில் வீடு சீரமைக்கும் பணிக்காக தோண்டியபோது உஷா மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பணம் தெரியவந்தது. பணமதிப்பிழப்பு பற்றி தெரியாத உஷா பல ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளாக 35 ஆயிரத்து 500 ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். இந்த பணத்தை மாற்றி தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.







