பிரசவத்திற்கு பிறகு குழந்தையை தரவில்லை எனக்கூறும் தாய்..! குழந்தையே பிறக்கவில்லை எனக்கூறும் மருத்துவர்கள்..!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா திருப்பதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கர்ப்பிணியாக இருந்தால் தான் கடந்த ஐந்தாம் தேதி திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றதாகவும் தன்னை பரிசோதித்த மருத்துவர்கள் 16ஆம் தேதி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும் அதன் படி மருத்துவமனையில் சென்று சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு அதிகாலை வரை தனக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு தனக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது என்று கூறும் சசிகலா அதன்பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும் குழந்தையை தன்னிடம் கொடுக்கவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அங்குள்ள டாக்டர்கள் சசிகலாவுக்கு கர்ப்பமே ஏற்படவில்லை என்றும் அவர் கர்ப்பிணியாக நடித்து உறவினர்களை ஏமாற்றியது போல மருத்துவர்களையும் ஏமாற்ற பார்ப்பதாக சசிகலா மீது திருப்பதி மகளிர் மகப்பேறு மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மருத்துவர்கள் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சசிகலா மற்றும் மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். தான் கர்ப்பமாக இருந்த போது சசிகலா தொடர்பான போட்டோ, மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட மற்ற பரிசோதனைகளை போலீஸாரிடம் அளித்துள்ளார்.
இதனால் குழம்பிப் போன போலீசார் சசிகலாவுக்கு பிரசவம் நடைபெற்ற உள்ளதா என்பதை கண்டறிய வேறு டாக்டர்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.







