குப்பையில் கிடந்த மருத்துவ காப்பீடு அட்டைகள்..!
புதுக்கோட்டையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தமிழக அரசின் மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் சுமார் 10 ஆண்டுகளாக பல உயிர்களை பறி கொடுத்த கிராம மக்களிடையே இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட வேண்டிய முதலமைச்சரின் காப்பீடு அட்டைகள் கட்டுக்கட்டாக தோண்டி கிடக்கப்பட்டன. இந்த அட்டைகள் கையில் கிடைக்காததால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மூன்று உயிர்களை பறித்து கொடுத்துள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர் கிராம மக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டவராயபுரம் கிராம மக்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்த நிலையில் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு 2011ஆம் ஆண்டே காப்பீடு அட்டைகள் கிடைத்து விட்டன. ஆனால் ஆண்டவர் ராயபுரம் கிராம மக்களுக்கு மட்டும் அது இன்னும் கிடைக்கவில்லை.
இதனால் உயர் சிகிச்சைக்கு கடன் பெற்று பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலைகள் ஏழை எளிய மக்கள் தள்ளப்பட்டனர். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்காமல் கடந்த 9 ஆண்டுகளும் ஆண்டவராயபுரம் கிராம மக்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்தநிலையில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காப்பீடு அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ காப்பீடு அட்டை கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் காப்பீடு அட்டை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களின் உயிர்காக்க பயன்பட வேண்டிய மருத்துவ காப்பீடு அட்டைகள் தோட்டத்து மண்ணில் புதையுண்டு கிடப்பதை எப்படி? காப்பீடு அட்டைகளை இப்படி அலட்சியமாக வீசிச் சென்ற அதிகாரிகள் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.







