ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் பாயும் எல்விஎம்-3 ராக்கெட்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் உடன் எல்விஎம்-3 ராக்கெட் இன்று ஏவப்படவுள்ள நிலையில், 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து 600 கோடி ரூபாயில் அதிநவீன சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று மாலை தொடங்கியது. முன்னதாக இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளின் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டிக் கொண்டனர்.மேலும் 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இந்தியக் கடலோர எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள், விமானங்கள் இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.






