வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம்… “பகுதிமக்கள் பீதி ” போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதி பாலாற்று கரையோரம் ஜெயராம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இதில் கடந்த பல ஆண்டுகளாக மல்லிகா, சம்பூர்ணம் உள்ளிட்ட பெண்கள் கால்நடைகளை மேய்த்து கொண்டு தென்ன ஓலையில் துடைப்பம் சீவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் மல்லிகா, சம்பூர்ணம் உட்பட மூன்று பெண்கள் பணியில் ஈடுபட்டு இருந்த போது புதரில் இருந்த சிறுத்தை நாயை பிடிக்க வந்துள்ளது. அப்போது அங்கே இருந்த 4க்கு மேற்பட்ட நாய்கள் சிறுத்தையை துரத்தியதால் சிறுத்தை மீண்டும் புதரில் பதுங்கியதை பார்த்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இத்தகவல் அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

இதனை தொடர்ந்து பகுதிமக்கள் காவல் நிலையத்திற்கும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரின் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்பலூர் காவல் நிலையம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தண்டோரா போடப்பட்டு பாலாற்று ஓரம் வசிப்பவர்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கவும் எச்சரித்து வருகின்றனர்.




