அரசு நலத்திட்டங்களில் எனது பெயரை பயன்படுத்தி யாரும் பணம் கேட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாஸ் பேச்சு..!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலம், தாலுகா ஆர்எஸ் மங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடி மராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பார்வையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்கள். ஆர்எஸ்மங்கலம் ஒன்றியம் தோட்டாமங்கலம் கிராமத்தில் 99.90 இலட்சம் செலவில் அந்த கிராமத்து கண்மாய், அதன் 8 மடைகளும் புதுப்பிக்க ஏதுவாக குடிமராமத்து பணிகள் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களில் இந்த குடிமராமத்து திட்டம் எனக்கு மிகவும் பிடித்த திட்டம் என்றும், இதனால் அந்தந்த கிராம மக்கள் மற்றும் ஆயக்கட்டு தாரர்கள் விவசாயிகள் பெரும் பயன் அடைவார்கள் என்றும் அந்தத் திட்டங்களை கிராம மக்களின் முன்னின்று செய்வதால் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் மேலும் இந்த திட்டங்களில் வேறு எவ்வித குழப்பமும் இல்லாமலும் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்ததோடு எனது பெயரை சொல்லி யாரும் பணம் கேட்டால் அப்படி எதுவும் கொடுக்க வேண்டாம் அப்படியே கேட்டு தொந்தரவு செய்யும் பட்சத்தில் எனக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

எனவே மக்கள் அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் இடையே பேசினார் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர். மேலும் விவசாயிகளும் இந்தத் திட்டத்தை 100% சரியாக செய்ய வேண்டும் என்றும் ஏதாவது உள்நோக்கத்தோடு வேலைகளை சரிவரச் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் தகவல் எனக்கு வந்தால் கண்டிப்பாக திட்டத்தை அதிகாரிகள் வைத்து நிறுத்துவதற்கு தயங்க மாட்டேன் எனவும் எச்சரித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் கண்மாய் கரையில் ஆக்கிரமிப்பு உள்ளது எனவும் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை அதுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கண்மாயின் கிளை வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கண்மாய் தூர்வாரும் பணியோடு அதன் கிளை வாய்க்கால்களையும் சரிசெய்ய ஏற்படும் செலவுகளை பற்றி அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்ய அதிகாரிகளை பணித்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான தொகை தனியாக வழங்கப்படும் எனவும் குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கிய பணத்தில் இருந்து செய்ய வேண்டியதில்லை என்றும், தனியாக இதற்கு நிதி ஒதுக்குவதாக கூறினார். அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.







