மதுரையில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் ஜே.பி நட்டா..!
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ள பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரையில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் .
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வியூகங்கள் அமைப்பதிலும் பரப்புரையை தொடங்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. பாரதிய ஜனதா சார்பில் தேசிய தலைவர் ஜேபி நட்டா பொங்கல் நாளன்று தமிழகம் வந்திருந்த நிலையில் தற்போது 2வது முறையாக நேற்றிரவு மதுரை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் பாரதிய ஜனதா தொண்டர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் எல்.முருகன் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஹெச் ராஜா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்த ஜேபி நட்டா இன்று காலை 8.30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார். பின்னர் நண்பகல் பதினோரு மணி அளவில் பாஜக சார்பில் நடைபெறும் மாநில மைய குழு கூட்டத்திலும் 12.30 மணிக்கு நடைபெறும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பத்தின் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
மதிய உணவுக்கு பின் மாலை 4 மணி அளவில் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் ஜேபி நட்டா 6:15 மணிக்கு தொடங்கும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு விடுதிக்கு திரும்பும் அவர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு மறுநாள் காலை மதுரையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு செல்கிறார்.







