ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா..!
ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. இந்தியா – சீனா எல்லையில் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இந்திய அரசு இந்திய விமானப் படைக்காக 21 மிக் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக 781 கோடி ரூபாய் செலவிடப்படும்.
அதைப்போலவே 12 சுகோய் விமானங்களையும் ரஷ்யாவிலிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவிடப்படும். இதை தவிர ஏற்கனவே இந்திய விமானப்படையிடம் இருக்கும் மிக் விமானங்களில் 59 விமானங்களை புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ரஷ்ய அரசும் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய பிரதமருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரஷ்யாவின் பிரதமராக புதின் 2036 ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கும் சூழ்நிலையில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அத்துடன் இந்தப் போர் விமானங்கள் குறித்த முக்கிய விஷயங்கள் குறித்து அவருடன் பேசியுள்ளார்.
ஏற்கனவே சீனாவுடன் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனாவிற்கு ஆதரவான போக்கிலேயே இருந்து வரும் ரஷ்யா அதேபோல் அமெரிக்காவுக்கு எதிரான போக்கிலேயே இருந்து வரும் ரஷ்யா இந்தியாவுக்கு உதவி செய்யுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில்தான் ரஷ்யாவிலிருந்து மிக் விமானங்கள், சுகோய் விமானங்கள் வாங்கப்படுகின்றன.






