லண்டனில் அரங்கேறியது இளையராஜாவின் சிம்பொனி..!
இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் எனும் சாதனையை படைத்துள்ளார். லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து, ‘வேலியண்ட்’ என்ற தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றியுள்ளார்.
திரைப்பட இசைப் பணிகளில் எந்த பாதிப்பும் இல்லாமல், 35 நாட்களில் சிம்பொனியை எழுதி முடித்திருப்பதாக கடந்தாண்டு அவர் அறிவித்த போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கிவிட்டது.
இதனை அடுத்து லண்டன் சென்ற இளையராஜா, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு Eventim Apollo அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, மேடைக்கு வந்த இளையராஜாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது. ‘ராஜா ராஜாதி’, ‘பூவே செம்பூவே’, ‘கண்ணே கலைமானே’ என திரைப்பாடல்களாக கேட்டு ரசித்தவர்கள், அதனை பிரம்மாண்ட ஆர்கெஸ்ட்ரா இசையாக கேட்டு ரசித்தனர்.






